Thursday, March 29, 2018

Women of Desire

நேற்று தான் பேனா தொலைந்து போனது புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். அதிலே நான் ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன் அங்கு யாருமில்லை என்று ஒரு கதை. படித்ததிலிருந்து எனக்கு ஊர் ஞாபகம் எல்லாம் இல்லை. ஊரோடு எனக்கு பெரிய உறவெல்லாம் இல்லை. அங்கே இருக்கும் திரையரங்குகளோடு சில ஞாபகங்கள் உண்டு.

சீர்காழியில் நான் இருந்த காலகட்டத்தில் மொத்தம் நான்கு திரையரங்குகள். இருந்தன. சிவகுமார், osm, துர்க்கா, ராஜா தியேட்டர்கள். இதில் சிவகுமார் தியேட்டருக்கு ஸ்டார் என்ற பெயரும் ராஜாவிற்கு ஜூப்பிடர் என்ற பெயரும் பழைய பெயர்கள். எப்போது இந்த பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ராஜா தியேட்டரை மட்டும் நான்கு பேர் முதல்போட்டு வாங்கி அதற்கு பாலாஜி திரையரங்கம் எனப் பெயர் வைத்து ஓட்டினார்கள். அந்த பெயர் மாற்றம் செய்த பிறகுதான் அங்கே புதிய திரைப்படங்களும் தமிழ் திரைப்படங்களும் காட்ட ஆரம்பித்தார்கள்.  அதுவரை ராஜா தியேட்டரில் "இங்கிலீஷ்" படங்கள் தான். போர்ன் என்ற வார்த்தை எல்லாம் அந்நியப்பட்டிருக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்கிற அடையாள எழுத்து மட்டுமே புரிகின்ற 'A' படங்கள்.

எனது ஏழாவது பரீட்சை ஆண்டு விடுமுறையில் ஒருநாள் மதியம் என் வீட்டற்கு மது வந்து வாசல் காலிங்பெல்லை அழுத்தினான்.  வாசலுக்கும் வீட்டுக்கும் 100 அடி தூரத்துக்கும் மேல். போய் என்னடா என்றால் சண்டை படம் ஒன்று போட்டிருக்கிறார்கள் ராஜா தியேட்டரில் வா போகலாம் என்றான். தனியாவா? என்றேன். இல்லடா நீ நான் அப்புறம் இதோ விஜயேந்திரன் மூனு பேரும் என்றான். இதுவரை தனியே சென்றதில்லையே என அப்பாவிடம் தயங்கிதயங்கி கேட்டேன். அப்பா ஏதோ யோசனையில் எந்த தியேட்டர் என்று கேட்டுவிட்டு சரிபோயிட்டு வா என்று பத்துரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பினார்.

கூடவே சேட்டு நண்பர்களும் வந்தார்களா என்பது நினைவில் இல்லை. வழியெங்கும் அந்த படத்தின் போஸ்ட்டரை தேடியபடியே சென்றேன். மெயின்ரோடு தாண்டி ஓரிடத்தில் ஒட்டப்பட்டிருந்தது. படத்தின் பெயர் jetli in The Legend. கிட்டத்தில் பார்த்தபோது கீழே U என்று பார்த்து மனது அப்பாடா என்றிருந்தது. அப்பா  என்மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.
எல்லோரிடமும் பணம் வாங்கி டிக்கெட் கௌண்ட்டரில் டிக்கெட் எடுத்தான் மது. இதில் விஜெயேந்திரனுக்கு மட்டும் நான் மூன்று ரூபாயும் மது நான்கு ரூபாயும் காசு போட்டோம் ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் ஏழு ரூபாய். வீட்டில் சொல்லாமல் நண்பனுக்கு செய்த முதல் செலவு. யோசனை உபயம் குருநாதன் மது. 

விளம்பரம் நியூஸ் எல்லாம் போட்டு படம் ஆரம்பித்தபோது மனதில் இனம் புரியாத சந்தோஷம் தனியாக வந்திருக்கிறோம் என்று. படத்தில் பேசியவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசினார்கள். ஆனால் படத்தில் எல்லோரும் அக்ரஹாரத்து பையன்களை போல முன் மண்டையை சிரைத்திருந்தார்கள். பெண்களை போல பின்னே ஜடை பின்னியிருத்தார்கள். பெண்களோ கொண்டையிட்டிருந்தார்கள். எல்லோரும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக திரைக்கு அங்குமிங்கும் தாவிக்கொண்டிருந்தார்கள். இன்னார்தான் ஹீரோ என்று கண்டறிவதற்குள்ளாகவே இடைவேளை போட்டுவிட்டார்கள். 


இடைவேளை என்றால் ஆங்கிலப்படத்தின் அந்த ரீலை அப்படியே நிறுத்திவிடுவது. இப்போது போலல்லாம் அப்படியே pause ஆகாது. பட்டென்று கட் ஆகிவிடும். நிறுத்திவிட்டு படத்துக்கு சம்பந்தமில்லாத வேறொரு காட்சி. வெற்று வானமும் கடலும் நிறைந்த திரையில் படகில் ஒரு பெண்  தோன்றினாள். தன் கவுனை கழற்றி வெற்றுடலில் அவள் முழு உடலையும் காட்ட நான் கண்ணை பொத்திக்கொண்டேன்.

ஓரக்கண்களால் நண்பர்களை பார்த்தேன். ஏறக்குறைய எல்லாருமே கண்ணை மூடியது மாதிரிதான் இருந்தது. ஆனால் சிரித்துக் கொண்டே இருத்தோம். அப்புறம் அந்த டிரையிலர் முடிந்து இடைவேளை விட்டு தியேட்டர் கதவு திறந்தவுடன் மது செலவில் முறுக்கு வாங்கி சாப்பிட்டு மீதிப்படம் பார்த்து அரைகுரையாக நாங்களே திரைக்கதை சொல்லிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அப்பாவிடம் விஜயேந்திரனுக்கு செலவு செய்ததை தயங்கியபடி சொன்னேன். பரவாயில்லை ஆனால் இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றார்.

அப்பாவிடம் அந்த டிரெயிலர் விஷயத்தை சொல்லலாமா என்று யோசித்தேன். இல்லை வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன். பத்தாவது படிக்கையில் வீட்டில் ஏதோ பேச்சுவாக்கில் அது A படம் என்று டைட்டானிக் படம் பற்றி பேசும்போது சொல்லி உதைவாங்கியபோது இரண்டு வருடங்கள் முன்பே நம் புத்திசாலித்தனம் வளர்ந்ததற்கு ஹார்லிக்ஸ்தான் காரணம் என்பதையும் அதை சாப்பிடுவதை நிறுத்தியது எவ்வளவு தவறு என்பதையும் புரிந்து கொண்டேன்.

பிற்பாடு மலீனா திரைப்படத்தில் பார்க்கும் போதும், அப்புறம் பாலக்குமாரனின் நாவலில் வரும் ஒரு விடலைப்பையன் ஆண்மை உணர்வு தாளாமல் அவதிப்படும் போதும் எனக்கு அந்த டிரையிலர் ஞாபகம் வந்தது.  இவ்வளவு ஞாபகங்களை சேகரித்தும் கூட  என் ஆண்மை விழிப்படைந்தது அந்த டிரைலர் பார்த்த அன்று தானா என்பது மட்டும் நிச்சயமாக தெரியவில்லை. பையன்களுக்கு புரிகிற வயதிலா பூப்பெய்கிறார்கள்? பெண்களுக்கு என்ன சொல்வார்கள் என்று தெரியாது. பையன்களிடம் இதை முறையாக பேசுவதற்கு என்ன வெளி இருக்கிறது குடும்ப அமைப்பில் என்று தெரியவில்லை. சரி நடந்து பல வருடங்கள் ஆன விஷயம். இப்போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அந்த வருத்தத்தையும் படத்தின் பெயரையும் பதிவு செய்யத்தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். படத்தின் பெயரா..? பதிவின் தலைப்பை இன்னொருமுறை முனுமுனுத்துக் கொள்ளவும்.

Tuesday, March 27, 2018

அரசு பற்றி லெனின்

பெரிய கரப்பானை விட சிறிய மீனே மேல் என்று வேடிக்கையாக சொல்வார் லெனின்
நாங்கள் சின்ன மீன்கள் என்று சிரிப்பார்கள் ஊழியர்கள்.
அளவில் சிறியது பயனில் பெரியது என்று பாராட்டுவார் லெனின்  
                        --லெனினுக்கு மரணமில்லை புத்தகத்திலிருந்து....
எனக்கு தெரிந்த லெனின்:
ஸ்மோல்னி குளிர்கால அரண்மனை நோக்கி கிளர்ந்தெழுந்த நவம்பர் மாத அக்டோபர் புரட்சியின் நூறாவது வருடத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் உலகெங்கும் பரவிய எனதருமை காம்ரேட்களுக்கும் சோவியத்தை நிறுவ தங்கள் இன்னுயிரையும் அயராத உழைப்பையும் அளித்து 73 வருடங்கள் அதை காப்பாற்றிய காம்ரேட்களுக்கும் எனது வணக்கங்களை சமர்ப்பித்து இக்கட்டுரையை துவக்குகிறேன்.
எனக்கு லெனின் எங்கள் பள்ளி புத்தகத்தில் அறிமுகமானார். அவரோடு ஸ்டாலினும் இரும்புத்திரை நாடும் அறிமுகமானது. எங்கள் வரலாற்று  ஆசிரியர்களுக்கு லெனினை விட, ஸ்டாலினை விட சர்ச்சிலும், காந்தியை விட சந்திரபோசும் படேலும் பெரிய ஹீரோக்களாக தெரிந்தார்கள். அதனாலேயே லெனினை நான் தெரிந்துகொள்ள மிக அதிக காலம் பிடித்தது. இடைப்பட்ட ஒரு நாளில் ஏதோ ஒரு புத்தகத்தில் ஒரு முறை லெனின் சொன்னதாக, ஓரளவு என் ஞாபக அடுக்குகளில் இருந்ததை பதிவிடுகிறேன். ட்சாரின் அரியாசனம் போல அது. புரட்சிக்கு பிறகாய் இருக்கலாம் அதில் அதிகம் உயரமில்லாத லெனின் உட்கார்ந்தார். அவருடைய தோழர் சொல்கிறார் “உங்கள் கால்கள் தரையில் படக் கூட இல்லை.” லெனின் இப்படி பதிலளித்தார் என நினைக்கிறேன் “ஆம். ஆனால்  என் தலை வானத்தை நோக்கி நிமிர்ந்திருக்கிறது.”
அந்த கம்பீரத்தை அவர் ஸ்மோல்னி அரண்மனை நோக்கி நடக்கும் ஓவியத்தில் பார்த்தேன். அவர் 24 அக்டோபர் மாலை எழுதிய கடிதம் அந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வரும். அது “இன்றே செயல் பட வேண்டும். தற்காலிக அரசாங்கத்தை கவிழ்க்கவேண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். நாம் உறுதியான நடவடிக்கை எடுக்கா விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது! நாளை நேரம் கடந்து போய்விடும்  இன்றுதான் கடைசித் தருணம்.”

நமக்குள் ஹீரோக்களை பற்றிய பொது அபிப்ராயம் உள்ளது. அவர்கள் மிடுக்காகவும், தோரணையாகவும், நேர்த்தியான உடை அணிந்தவர்களாகவும்  அண்ணார்ந்து பார்க்கப்பட வேண்டியவர்களாகவும் நாம் பிம்பத்தை வளர்த்துக் கொண்டுவிடுகிறோம். ஆனால் நிஜம் அப்படியல்ல என்பதற்கு லெனின் ஒரு மிகச்சிறந்த உதாரணம். அதை அமெரிக்க நிருபர் ரைஸ் வில்லியம்ஸ் வார்த்தைகளில் கூறுவதானால் “நாங்கள் உருவகப்படுத்தி வைத்திருந்ததற்கு அனேகாமாக எதிரிடையாக இருந்தார். வாட்டசாட்டமாகவும் மிடுக்குடனும் தோற்றம் அளிப்பதற்கு பதில் அவர் குட்டையாக கட்டுக்குட்டென்று இருந்தார். அவருடைய தாடியும் தலைமயிரும் முராடாக கலைந்து கிடந்தன”.
வில்லியம்சுடன் வந்த ஒரு நிருபர் கூறி இருக்கிறார் இப்படி “மிகவும் பெரிய வேலைக்கு மிகவும் சிறிய மனிதர்” சுருக்கமாக அவர்கள் யாருக்கும் லெனின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் அவை அனைத்தையும் தகர்த்தெறிந்தார் லெனின். அவரது உரைகளும் விவாதங்களும் புள்ளிவிவரங்களோடு இருந்தன. அவருடைய நிர்வாகம் நிதானமான உறுதியான சோவியத்திற்கு வழி வகுத்தது.  
மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய கம்யுனிச சித்தாந்தத்தை பரிசோதனைக்கு உட்படுத்தி அதை வெற்றி பெறச் செய்ததினால் வரலாறு மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின் என்று பதிவு செய்து கொண்டது என என் மாமா இரகு எனக்கு சொன்னார். சோவியத் மிக உறுதியாக  கட்டமைக்கப்பட அவரது அரசியல் உரைகளும், அவர் தன் சொந்த வாழ்விலும், நிர்வாகத்திலும் கடைபிடித்து வந்த கம்யுனிச கொள்கைகளும் உறுதுணையாய் இருந்தது எனச் சொன்னால் அது மிகையில்லை.எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை யாருக்கும் கேக் கிடையாது என்ற கொள்கை அங்கே கடைபிடிக்கப் பட்டதை உதாரணமாக சொல்லலாம். ரேஷன் உணவுகளை மட்டுமே உட்கொண்டதையும் எல்லா தொழிலாளிக்கும் கொடுக்கும் 600 ரூபிள் சம்பளமே தனக்கும் என்று நிர்ணயம் செய்துகொண்டதையும் அவர் எவ்வளவு தூரம் மக்களுக்கு அண்மையில் இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும். (இன்று நாட்டிலேயே இல்லாமல் வெறும் சமூக வலைதளங்களில் மென்பொருட்களின் தயவோடு மக்கள் தொடர்பில் இருப்பதாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களே நமக்கு வாய்த்திருக்கிறார்கள்).
லெனின் சென்ற பாதையில் சோவியத் மக்கள் பின்னே நின்றனர். நிலம் உழுபவனுக்கு, தொழிற்சாலை தொழிலாளிக்கு என லெனின் தெளிவான குறிக்கோளுடன் இருந்தார். அதை மக்களுக்கு புரியும்படியான உரைகளிலும் கடிதங்களிலும் வலியுறுத்தி வந்தார். அவர் அரசு பற்றி நிகழ்த்திய ஒரு உரை பற்றி என்னளவில் புரிந்து கொண்டதை இங்கே பதிவு செய்கிறேன்.
அரசு பற்றி லெனின்:
அரசு என்பது என்ன என்ற தெளிவான உரையுடன் தொடங்கும் லெனின் அரசு ஒரு ஒழுங்குமுறை செய்யப்பட்ட வன்முறை கருவி என்கிறார், ஆதிப் பொதுவுடைமை சமுகத்தில் அரசென்று ஒன்று இல்லை. அரசின் தோற்றம் வர்க்கப்பிரிவினை இவை இரண்டும் ஒன்றாக தோன்றி இருக்கவேண்டும். சிறுபான்மையான ஒரு வர்க்கம் உழைப்பை சுரண்டி மூலதனத்தையும் அதில் கிடைக்கும் லாபங்களையும் அனுபவிக்கிறது. உழைப்பை கொடுப்பதற்கு தேவையான பலத்தை கொடுக்க மட்டுமே உன்ன உணவும் நீரும் உடையும் இருப்பிடத்தையும் இன்னொரு வர்க்கம் பெற்றுக் கொள்ள அனுமதிக்கிறது. உழைக்கும் வர்க்கம் அந்த நிலையிலிருந்து தாண்டிச் சென்றுவிடாதபடி கட்டுக்குள் வைத்திருக்க சுரண்டும் வர்க்கம் உபயோகிக்கும் ஒரு இயந்திரம், ஒரு கருவியே அரசு.

தீர்க்க தரிசனம் போன்ற இந்த உரை அடிமை, பண்ணையடிமை சமூகங்கள் தாண்டி பல ஆயிரம் வருடங்கள் கழித்தும் இன்றைய கோர்போரடே உலகத்தோடு மிக அழகாய் பொருந்துகிறது. இங்கே ஜனநாயக முறைப்படி அந்த வன்முறைக் கருவியை யார் கையாளவேண்டும் என்று தேர்வு செய்வது மட்டுமே இன்று எனது உரிமையை இருக்கிறது. அதுவும் நிபந்தனைக்கு உட்பட்டுவிடுகிறது. சில நேரங்களில் இன உரிமை கூட கள்ளத்தனமாய் மறுக்கப்படுகிறது. MNCயில் வாக்களிக்க பலரை விடுமுறை என்றபோதும் அனுமதிக்கவில்லை. அரசும் அதை கண்டும் காணாமல் விட்டுவிட்டது.

தோழர் லெனின் சொல்வது போல நாம் அரசை ஒரே நாளிலோ ஒரே வருடத்திலோ கூட அப்படியே புரிந்து கொண்டுவிட முடியாது. மீண்டும் மீண்டும் ஆராய வேண்டிய பொருள் அது. அவர் சொன்னதுபோல அது சாதியோடும் மதத்தோடும் போட்டு குழப்பிக் கொண்டு அனுகக்கூடாது. அரசை புரிந்து கொள்ள நாம் அடிமை பண்ணைஅடிமை சமூகத்தில் எப்படிப்பட்ட அரசுகள் நடத்தப்பட்டன என்றும் ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில் எப்படி அரசில்லாமல் ஒரு சமூகம் நடந்தது என்றும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். பிறகு இன்றைய முதலாளித்துவ ஆதிக்கத்தில் நம்மை ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் குழப்பி பிரித்து ஆளும் கருவியாக அரசு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
அரசை பொறுத்தவரை உழைக்கும் இந்து உழைக்கும் முஸ்லிம் உழைக்கும் கிறிஸ்தவன் யாராக இருந்தாலும் இவர்கள் கிளர்ந்தெழுந்தால் கலகக்காரர்களே. அரசு முதலாளிகளை பாதுகாக்க மட்டுமே. முதலாளியாய் இருக்கும் எந்த மனிதனுக்கும் சேவகம் புரிவதே உழைப்பளியாய் இருக்கும் மனிதனின் கடமை என போதிக்கும் அரசு ஏதோ தெய்வீகம் வாய்ந்த ஒன்றாக மக்களை கருத செய்கிறார்கள் என்பதை தோழர் லெனின் விளக்கி இருக்கிறார்.

அந்த தெய்வத்திற்கு எதிராக கிளர்ந்தெழும்போது இன்றைய சூழல் நம்மை தேசியத்திற்கும் இறையாண்மைக்கும் எதிரானவன் என பட்டம் தரப்படுகிறது. அரசுக்கு எதிராக பேசுவதால் அரசின் கைத்தடிகளால் நாம் ஒடுக்கப்படுகிறோம். போலிஸ் ஜெயில் ராணுவம் என நம்மை ஒடுக்கும் ஆயுதங்களை பட்டியலிடுகிறார் லெனின். முடியரசு குடியரசு இரண்டிலும் இதுவே நிலை. ஆயினும் முடியரசிளிருந்து குடியரசு சற்று வேறுபடுகிறது. நமக்காக நாம் சிந்திக்க நமக்கு ஒரு வெளி கிடைத்திருக்கிறது. அதிகாரவர்க்கம் குண்டாந்தடி எடுப்பதற்கு முன் நம்மை நைச்சியப்படுத்துகிறது. தன சுயரூபத்தை வெளிப்படுத்தும் முன் நம்மை ஏமாற்றும் உத்திகளை முயன்று பார்க்கிறது. ஊடகம் மூலமாக சலுகைகள் மூலமாக, மதரீதியான பிணைப்பின் மூலமாக தன ஆக்டோபஸ் கரங்களை கொண்டு முதலில் தொழிலாளர் வர்க்கத்தின் கண்களை மூடப் பார்க்கிறது. விசுவாசமாய் இருத்தல் , பயந்து இருத்தல் போன்ற உத்திகளை ஆயிரம் ஆண்டுகளாய் போதித்து வந்த அது இப்போது எல்லோரையும் முதலாளிகள் ஆக்குவதாக போலியான ஓர் உத்தியை கையில் எடுத்திருக்கிறது. உதாரணமாக ஒவ்வோர் குடிமகனின் பெயரிலும் கருப்புப்பணம் 15 லட்சம் வைப்பு நிதியில் போடுவதாக பொய் பரப்பிய தற்போதைய ஆட்சியை சொல்லலாம். கருப்பு பணம் இந்நாட்டின் முதலாளிகளுடையது என்பதையும் அந்த முதலாளிகளை காக்கவே இந்த அரசு என்பதையும் இப்போதாவது நம் அருமை குடிமகன்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதுவும் முதலாளிகளிடம் கடனாக கொடுத்த பணமே வராதபோது கருப்பு பணம் மீட்பது எப்படி என்ற சந்தேகம் இந்நேரம் நம் குடிமக்களுக்கு வந்திருக்க வேண்டும்.
இதிலிருந்து கம்யுனிச அரசு எவ்வகையில் மாறுபடும் என்ற கேள்வி எழக்கூடும். ஏன் அவர்கள் ராணுவம் வைத்திருக்க மாட்டார்களா? ஜெயில் சிறைச்சாலைகள் இருக்காதா? என்ற கேள்விகள் கண்டிப்பாய் இருக்கும். லெனின் சொல்வது போல மூலதனத்தின் ஆதிக்கத்தை தூக்கி எறிய வேண்டிய ஒரு வர்க்கத்திடம் இந்த இயந்திரம் ஒப்படைக்கப் பட்டால்  அரசு என்பது சமத்துவத்தை ஆதாரமாக கொண்டது எனும் பழைய தப்பெண்ணங்கள் மறுக்கப்படும். அந்த இயந்திரத்தை பாட்டாளி வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் கையில் எடுக்கும். போலி வாக்குறுதிகளை அளிக்காத கம்யுனிச அரசு தெளிவான செயல் திட்டங்களுடன் இருக்கும். தொழிலாளிகளை பாதுகாத்து முதலாளிகளின் தனியுடைமைகளை பொதுவுடைமை ஆக்கும். தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு ஓர் சீரான சமூகமாக இயங்கும் வரையில் உபயோகப்படுத்தப்படும் அரசு எனும் கருவி.
சுரண்டலுக்கு வேண்டிய வாய்ப்பு உலகில் எவ்விடத்திலும் இல்லாமல் போகும்போது நிலா சொந்தக்கரர்களும் ஆளை சொந்தக்கரர்களும் எங்குமே இல்லை எனும்போது, சிலர் வயிறாற சாப்பிட மற்றவர் பட்டினி கிடக்கும் நிலை இல்லாத போது இதற்க்கெல்லாம் வாய்ப்பில்லை என ஆகும்போது சுருக்கமாக என்றைக்கு தனியுடைமை ஒழிந்து இருக்கிறதெல்லாம் பொதுவாய் ஆகிறதோ அன்று கம்யுனிசத்தோடு ஒட்டி இருக்கும் அரசு எனும் இயந்திரம் குப்பையில் எறியப்படும். கம்யுனிசம் சமூகமாக மலரும்.

முடிவாக:
உலகின் வருங்காலம் பற்றி லெனின் தொகுத்து உரைத்ததை சுருக்கி இங்கே பதிவிடுகிறேன்(அதற்கு எனக்கு உரிமையில்லை எனினும் கட்டுரையை முடிக்க அனுமதியும் மன்னிப்பும் கோருகிறேன்)
“ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிசத்தை நோக்கி தனக்கே உரிய வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிருபிப்பதாக தோன்றுகிறது. பற்பல தற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும்.”

இந்தியாவில் கம்யுனிசபூதம் கால் பதித்து 100 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் 9 ஆண்டுகள் இருக்கின்றன. 100 வருடங்களுக்கு முன் ரஷியாவில் சோஷலிசத்தை நிறுவியதை காட்டிலும் இப்போது இங்கே எளிதாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் அங்கே முன்பு காணப்படாத அமைப்பு சட்டங்கள் ஸ்தாபனங்கள், எல்லா வகையான அறிவுத் துணைக்கருவிகள் ஆகியன இன்று நமக்கு கிடைத்திருக்கின்றன. முதலாளித்துவம் corporateஆக உருவெடுத்து இருந்தாலும் மக்களுக்கு இடதுசாரிகள் மீதான நம்பிக்கை இன்னும் துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. 1905லிருந்து என வைத்துகொள்வோமே, அதிலிருந்து 12 வருட தயாரிப்புகளும் ஒரு நாளின் கிளர்சிசியும் ஒரு பொதுவுடைமை அரசை நிறுவி 73 வருடங்கள் உறுதியாய் வைத்திருந்திருக்கிறது. நமக்கு 9 வருடங்கள் இருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தை திரட்ட்டவும் அப்படி ஒரு அரசை நிறுவவும் அதை சமூகமாக மாற்றவும்.

அப்படி ஒரு சமூகத்தை நோக்கி நடைபோட என்று ஒரு பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கம் முனைந்து, இந்தியாவில் சோஷலிச வெற்றியை ருசிக்க ஆரம்பிக்கிறோமோ அன்று ஓர் உடலாக ரஷியாவிலும் உலகின் பல லட்சம் தொழிலாளர்களின் ஆத்மாவாகவும் வாழும் உங்களை சந்திக்க என்னை தயார் படுத்திக்கொள்வேன் தோழர் லெனின்.

வெக்கை என் பார்வையில்

மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனுக்கு அரசியலில் நேர்மறையிலோ எதிர்மறையிலோ கணிசமான விகிதத்தில் பங்கு உண்டு என்பார் என் மாமா. புரியாமல் விழித்த அன்று  சொன்னார். அதோ அந்த வாழைப்பழ கடைக்காரருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமுண்டு ஆனால் அவருக்கு அது தெரிந்திருக்காது. நீ படிப்பதில், பேசுவதில், ஏன் நீ யோசிக்கும் எந்த ஒரு  செயலிலும் அரசியலில்லாமல் அதன் பின்புலமின்றி இல்லை என்றார். இதை நான் இங்கே சொல்ல ஒரு காரணமுண்டு.
சிதம்பரம் என்னும் பதினைந்து வயது சிறுவனின் பழி தீர்த்தலும் அதன் காராணமும் அதன் விளைவும் ஏன் அதன் முற்றுமே கூட அரசியல் வியாபித்த ஒன்றுதான். ஒரு நிலவுடமை  பிரச்சினை, முதலாளித்துவம் ஆதிக்கம், வர்க்கப் பிரிவினை, அதன் ஜனநாயக வழிப் போராட்டமும், அதன் தோல்வியும், ஒரு ஆயுதமேந்திய தனிநபர்/குழுப் போராட்டம்(அது ஒரு வகையில் பழிதீர்க்கும் படலமெனினும்.). அதன் பிறகான அஞ்ஞாத வாசம், சட்ட சிக்கல், நீதிமன்றம் பணத்தின் பொம்மை என்று கதை நெடுக அரசியலின்றி வேறில்லை. தீர்வென்ன  என்று ஆசிரியரிடம் கேட்க முடியாது. கதை சொல்வது எளிது. பிரச்சினையை பிரச்சினையாக, அதன் மூலம் வரை எடுத்துரைத்துவிட முடியும் நம்மால். ஆனால் அதற்கு தீர்வென்பது வாசகன் கையில் தான் போலும். வேணுமெனில் ஒரு வாசகனாய் நான் இப்படி சொல்லிக்கொள்கிறேன். இவற்றிற்கெல்லாம் தீர்வென்று ஒன்று கிடையாது. ஒரு பிரச்சினைக்கு தீர்வு  இன்னொரு பிரச்சினையாகத்தான் இருக்க முடியும் என்ற விதியை இங்கே பொருத்திக் கொள்கிறேன்.





மேலே சொல்லப்பட்ட பத்தியில் கதை முடிந்து போகிறது சுலபமாய். ஒரு வெள்ளை துணியில் பட்ட சாயம் போல. அது நிஜத்தில் நடந்த சம்பவமாய் இருக்கலாம். அதை அழகான நுணுக்கமான ஓவியமாய் மாற்ற ஆசிரியர் எவ்வளவு  முயற்சித்திருப்பார் என்ற யோசனை கூட என்னால் சாத்தியப்படாத ஒன்று. சிறு வயதில் நாமும் பல வகையில் வாழ்ந்திருப்போம். குழந்தை விளை\யாட்டுகள் விளையாடி இருப்போம். அதே சமயத்தில் பெரிய பிரச்சினைகளை சமாளித்திருப்போம். விளையாட்டும், வன்மமும் எந்த மனிதனின் வாழ்விலும் பால்யத்திலிருந்து பிரிக்க இயலாத ஒன்று. எவரும் என் வாழ்வு  கடினமான வாழவே முடியாத ஒன்று என்று பீற்றிக் கொள்ள முடியாது. ஏனெனில் எல்லோரும் வாழ்ந்த வாழ்வைத்தான் நாமும் வாழ்கிறோம் சற்று வித்தியாசங்கள் இருக்கும். அவ்வளவுதான். ஒருவேளை என் பேரனிடமோ அல்லது பேத்தியிடமோ என் மகளோ மகனோ சொல்லக்கூடும் இப்படி "நாங்களெல்லாம் அந்த காலத்தில ஆடாத வீடியோ கேமா? அப்பல்லாம் அப்படி விளையாடிருக்கோம்" என்று. நாம் இன்று சொல்கிறோமே நான் பம்பரம், கிட்டிப்பில், எல்லாம் விளையாடி இருக்கிறேன் என்று. அது போல.


ஒரு உதாரணம் என் ஊரில் நடந்தது. அவன் பெயர் யானைக் கார்த்தி. ஒரு மட்டை பந்து விளையாட்டின் போது அவனுக்கும் என் நண்பனுக்கும் தகராறு வர அதில் அவன் என்  நண்பனின் அண்ணனை தரக்குறைவாய் பேசிட அது ஒரு நண்பர்கள் சண்டையிலிருந்து விரிந்து அரிவாள் எடுத்து குடும்ப சண்டையாய் பின் ஒரு ஜாதி சண்டையாய் போய் காவல் துறை தலையீட்டில் முடிந்தது. வெகுநாள் அதன் வஞ்சம் அவர்களுக்குள் புகைந்திருந்தது. இப்படி விளையாட்டுகளும் வன்முறையும் மாறலாம். அனால் ஆடும் மனநிலையும் வன்மமும்  நமக்கு அப்படியே இருக்கிறது தலைமுறை தலைமுறையாய் என்பதை இக்கதை எனக்கு அடித்துச் சொல்கிறது. அது மாறப்போவதில்லை. முயற்சித்துப் பார்க்கலாம்.


இக்கதையில் சிதம்பரமும் அவன் அண்ணனும் பல விளையாட்டுகள் விளையாடுகிறார்கள். காடு மலை என சுற்றித்திரிகிரார்கள். அவர்களின் இயல்பு வாழ்க்கையிலேயே விளையாட்டு,  அன்றாட ஜீவனம், சண்டை, திருட்டு, கொலை, மருத்துவம் என்று இயைந்திருக்கிறது. வடக்கூரானும் அவன் மச்சினன் ஜின்னிங் பாக்டரி முதலாளியும் அந்த ஊரை வளைத்துப் போட்டுக்கொண்டே வர அதை தன்னளவில் எதிர்த்து நிற்கிறார்கள் சிதம்பரத்தின் அப்பாவும் மாமாவும். எதிர்ப்பது என்பது எதிரிகள் இருவரும் களத்தில் இன்றி நடத்தும் பனிப்போர் போல.  அந்த பனிபோரில் வஞ்சிக்கப்பட்டு பலியாகிறான் சிதம்பரத்தின் அண்ணன். (அவன் இயல்புகள் யாவுமே கவனிக்கப்பட வேண்டியவை. நம்மிடமும் அப்படி ஒரு மனிதரின் தாக்கமிருக்கும்). இப்போது போர் களத்தில் திட்டவட்டமாகி போகிறது. சிதம்பரம் குடும்பத்தில் உறவுகளில் எல்லோருமே வடக்கூரானின் எதிரி என்றாகிப் போகிறது. யார் பழி தீர்க்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் எல்லோருக்கும் முந்திக்கொள்கிறான் சிதம்பரம். அரிவாள் ஒன்று செய்து கொள்கிறான். குண்டு செய்யக் கற்றுக் கொள்கிறான். ஒரு திங்கட்கிழமை  சாயந்திரம் வடக்கூரானின் கையை வெட்டுவது என்று முடிவு செய்கிறான். ஆனால் இருட்டில் விலாவில் பதம் விழுந்து வடக்கூரான் இறந்து போகிறான்.


இங்கே பழி முடிந்து போகிறது.  பிறகு தான் இயல்பு வாழ்வின் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. அங்கே ஒரு ஓட்டம் ஆரம்பமாகிறது. நினைவுகளில் பல வந்து போகின்றது. அம்மா, அப்பாவியான அத்தை, மாமா, எல்லாவற்றுக்கும் மேலாக தன அப்பா என எல்லாரும் பாதிக்கப்படுகிறார்கள். தன் தந்தையே இப்படி ஒரு அஞ்ஞாத வாசத்தில் அகதியாய் ஒரு கிராமம் விட்டு இந்த கிராமத்தில் வாழ வந்தவர்  என்பதும் இப்போது ஏறக்குறைய தன நிலையும் அப்படித்தான் என்பதும் புரிகிறது. நீதிமன்றம் சென்று வழக்காடிப் பார்ப்பது என்று முடிவு செய்ய, வழக்கை நடத்த பணம் தேவை, அதை தயார் செய்ய நேரம் தேவை, அன்றாட சோற்றுக்கு பணம் தேவை, ஓரிடத்திலும் தங்க முடியாமல் ஓட பணம் தேவை என்று நல்லவன், கெட்டவன், குற்றம் செய்தவன் செய்யாதவன் எல்லாருக்கும் தேவையான பணம் இங்கே சிதம்பரத்துக்கும் அவன் தந்தைக்கும் தேவையாகிப் போகிறது. அதை சம்பாத்தித்துக் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராக  முடிவெடுக்கிறார்கள். அங்கே கொலையை தான் செய்யாததாக சொல்லப்போவதாக முடிவெடுக்கிறார்கள். ஒரு பழி முடிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. அதன பிறகான வாழ்க்கையை பற்றிய யோசனை உண்டு. அந்த வாழ்வில் சொல்ல முடியாத சோகங்கள் இருக்கும், ஒரு காதல் இருக்கும். ஒரு தங்கையின், தாயின் அரவனைப்பிருக்கும், ஒரு மாமனின் வழிகாட்டல் இருக்கும். அவையெல்லாம் எப்போதும் வேண்டும். ஒரு மனிதன் வாழ்ந்து இறந்து போகும் வரை வேண்டும். அதற்க்கேனும் அவர்கள் வழக்காடித்தான் ஆகவேண்டும். அதை இழுத்தடிக்க  முயற்சித்து தான் ஆகவேண்டும். எனவே அவர்கள் போராடித்தான் ஆகவேண்டும். நீதிமன்றம் குற்றமாய் பார்த்து அவர்களை தண்டிக்க முயற்சித்தாலும் அவர்கள் தன்னளைவில் இந்த போராட்டத்தை நடத்தித்தான் ஆகவேண்டும், வெட்டப்பட்ட பிறகும் துடிக்கும் உறுப்பு போல.


அதை தவறென்று சிதம்பரமோ, அவன் தந்தையோ, வாசகனோ சொல்ல முடியாது. இதன்  விளைவு இப்படியெல்லாம் என்பது தெரியும். தெரிய வேண்டும். நம் வாழ்விலும் சிதம்பரம் இருப்பார்கள். யோசித்துப் பாருங்கள். நீதிமன்றம், சிறை, காவல்துறை என்று ஒருபக்கம்  வாழ்ந்துகொண்டே தாய், தந்தை குடும்பம் நண்பர்கள் என்றும் வாழ்வார்கள். இதை அவலம் என்று சொல்வதா வாழ்க்கை என்று சொல்வதா தெரியவில்லை. ஆனால் எப்போதும் நம் தாத்தாவிடமிருந்து அப்பாவுக்கும், அப்பாவிடமிருந்து நமக்கும், நம்மிடமிருந்து நம் மகனுக்கும்/மகளுக்கும் ஏதோ ஒன்றை மீதம் வைக்க வேண்டிய அவசியமிருக்கிறது. அது யாதென்பதுதான் நம் கையில் இல்லை. அது நம்மை சிதைக்கும், நசுக்கும்,  ஆட்டுவிக்கும், ஒருவேளை முயற்சித்தால் மாறிப்போகும் பொருளாதாரத்தின், அரசியலின் கைகளில் இருக்கலாம்.

Sunday, March 25, 2018

நான் இந்துத்வன் இல்லை

சீர்காழியில் அது 2002 ஆம் ஆண்டில் ஒரு நாள் மாலை. புற்றடி மாரியம்மன் கோவில் தெரு சற்று விசாலமாய் அதே சமயம் கொஞ்சம் இருட்டாக இருக்கும். அந்த வீதி வழியே நடந்து போய் கொண்டிருந்தேன். எனக்கு முன்னே வேட்டி சட்டையில் போய் கொண்டிருந்த பையனை அப்போது தான் கவனித்தேன். நண்பன் மதுஎப்போதும் ஷார்ட்ஸ் அணியும் மது வித்யாசமாக வேட்டி கட்டியிருந்தான். அருகில் சென்று பார்த்தால் கை கால் நெற்றியில் எல்லாம் திருநீறு. “என்னடா இன்னைக்கு சந்த்யாவந்தனம் பண்ணினியா? நீ அதெல்லாம் செய்ய மாட்டியே" என்றேன். இவன் ஆரம்பித்தால் பின் என்னையும் திரும்ப ஆரம்பிக்க சொல்லிவிடுவார்கள் வீட்டில். ஏற்கனவே நடராஜன் மாமாவிற்கு பயந்து பயந்து தப்பித்துக் கொண்டிருக்கிறேன் நான் (அவர் பெயரை இங்கு எழுதுவது கூட உங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தானே தவிர ஒரு நாளும் அவர் பெயரை உச்சரித்ததில்லை மனதளவில் கூட. மாமா என்று மனம் நினைத்தவுடன் அவர் முகம்தான் முதலில் நினைவில் வரும்). சரி மதுவின் கதைக்கு வருவோம். இவனை கேட்டால் இவன் அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் பஜ்ரங்கதள்ளில் சேரப்போகிறேன் என்றான்

பஜ்ரங்கதள் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு முக்கால் மணிநேரம் விளக்கினான். இந்து முஸ்லிம் சண்டை, பாபர் மசூதி பிரச்சினைக்கு தீர்வு என்று எதையெதையோ சொன்னான். பம்பாய் திரைப்படம் பார்த்த பிறகும்கூட எனக்கு அந்த பிரச்சினை சரியாக புரியவில்லை. அது வேறு கதை.  எனக்கு புரிந்ததெல்லாம் பஜ்ரங்கதள்  பிராமணர்களுக்கு எதாவது பிரச்சினை என்றால் வருவார்கள் போலிருக்கிறது என்ற அளவிலேயே புரிந்து கொண்டேன். அதற்கு மேல் எனக்கு எந்த விளக்கமும் தேவைப்படவில்லை. நான் கேட்டேன்எப்படிடா அதுல சேருவது?” எனக்கு தனிப்பட்ட முறையில் அன்று நிறைய எதிரிகள் இருந்தார்கள். சரி நமக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கட்டுமே என்றுதான் கேட்டுவைத்தேன். அதற்கு அவன் நிறைய கட்டுப்பாடுகள் சொன்னான். முக்கியமாக நினைவில் இருப்பது அடிக்கடி வேட்டி கட்டவேண்டும் என்பது. என்னதான் பாரம்பரிய உடை என்றாலும் எனக்கு வேட்டி கட்டுவதில் இருந்த அசௌகரியமே எனக்கு பஜ்ரங்கதள் மீதிருந்த ஈடுபாட்டை வெட்டிவிட்டது. அன்றோடு அவனிடம் அந்த பேச்சை விடுத்தேன்.


பின்னர் நாளிதழ்களின் எல்லாவற்றிலும் அதுபோன்ற இயக்கங்கள் நிகழ்த்திய வன்முறை வெறியாட்டங்கள் படித்து அதன் மீதான எச்சரிக்கை உணர்வும் பின்னாளில் எதிர்ப்பு உணர்வுமே வளர்ந்தது. போதாதென்று இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் வேறு ஒரு கையெடுத்து கும்பிடுபவர் படத்தை போட்டு என் மனதை கலங்கச் செய்திருந்தது. நல்லகாலமாக மார்க்ஸ் காப்பாற்றினார் என்னை.  உண்மையாகத்தான் சொல்கிறேன் காப்பாற்றத்தான் பட்டிருக்கிறேன். நீங்கள் இ.பா. சிந்தன் அவர்களின் மொழிப்பெயர்ப்பில் வெளியாகவிருக்கும் புத்தகம் “இந்துத்வாவின் நிழல் ராணுவங்கள்” அவசியம் படித்துப்பாருங்கள். எவ்வளவு பெரிய வலையை அவர்கள் வீசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். செய்து வைத்த கொஞ்சநஞ்ச சமூகசீர்திருத்தங்களையும் அழித்து ஒரு நாட்டை மீண்டும் பலவருடங்கள் பின்னுக்கு தள்ள அவர்கள் எவ்வளவு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியும். நான் படித்த பள்ளிகளில் ஒரு உறுதிமொழி எடுக்க சொல்வார்கள். அது இந்தியர் அனைவரும் எனது சகோதர சகோதரிகள் என்று. அதை இவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். இல்லை இவர்கள் தான் முடிவெடுப்பார்கள் யார் இந்தியர்கள் என்று.

என்னுடன் வேலை பார்த்த சுரேஷ் அடிக்கடி சொல்வான்நாங்கள் (அதாவது பா..) ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் அவர்கள் மதத்தை அவர்கள் வீட்டிலேயே வைத்துவிட்டு வரவேண்டும். ஏனென்றால் இது இந்துக்கள் நாடு என்பான்”. அதற்கு நான் சொன்ன மறுமொழி இங்கே வேண்டாம். ஆனால் அவன் சொன்னது 2012ல். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்ததும் என்னிடம் தொலைப்பேசியில் கொக்கரித்தான். இந்த தேசத்தின் மக்களை எண்ணி கொதித்ததை தவிர அன்று நான் வேறு எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்று இந்த புத்தகம் எனக்கு ஒரு மிகப்பெரிய படிப்பினையை தந்திருக்கிறது. இப்போது  சுரேஷின் மீது எனக்கு பரிதாபம் அதிகரிக்கிறது. எப்படியெல்லாம் இந்த தேசத்தை மதத்தின் பெயரால் ஆட்டுவிக்கிறார்கள்.   என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு கடவுளை நம்புகிறீர்கள் என்பதாலும் அதற்கு குறிப்பிட்ட ஒரு மதத்தில் இருப்பதாலும் எப்படியெல்லாம் மார்கெட்டிங் செய்கிறார்கள். ஆசிரமம் அமைத்து அக்கிரமம் செய்தல், இளைஞர்களை கூலி அடியாட்களாக மாற்றி வன்முறையை கட்டவிழ்த்தல், இன்னொரு மதத்தை சேர்ந்தவர்களை அழிக்க யாத்திரை செய்தல், இன்னும் குண்டுவைக்க தூண்டுதல் கொலைசெய்ய தூண்டுதல் என முழுக்க முழுக்க அவர்கள் இதை நாடு முழுவதும் செய்யத்தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள் அவசரமே காட்டாமல் கிட்டத்தட்ட ஒரு நாற்பது வருடங்களாக பரவியிருக்கிறார்கள் இதுபோல. புத்தகம் இதை தாண்டி இன்னும் இரண்டு விஷயங்களை பேசுகிறது. அது ரானுவப்பள்ளி என்கிற பெயரில் இந்து தீவிரவாதத்தை வளர்த்தல் சீக்கிய மதத்தை சிறிய மதம் என்றும் அதை இந்து மதத்தினுள் அடக்கம்தான் என்றும் அதை நம்பவைக்க அவர்கள் நகர்த்தும் காய்களும் இருக்கிறதே. அடடா  இன்னமும் இந்த நாடு மக்களுக்கு விழிப்பு தட்டவில்லை என்றால் பன்மையில் ஒருமை என்கிற இந்திய தேசிய ஒருமைப்பாடு கேலிக்கூத்தாகிவிடும்.

பிற்பாடு என் தாய்மாமாவிடம்(இவர் உறவு) ஒருநாள் கேட்டேன். மாமா பஜ்ரங்கதள்னா என்ன? “அது ஒன்னுமில்லடா பஜ்ரங்னா குரங்குன்னு அர்த்தம். வானரப்படைஎன்றார். அந்த பஜ்ரங்கதள் மீதிருந்த மரியாதை போச்சு. இப்போது ஞாபகப்படுத்திப் பார்த்தால் அன்றைக்கு பிறகு நானும் மதுவை அந்த தோற்றத்தில் பார்க்கவில்லை. ஆனால் மது என்னை போல வேட்டி கட்டவேண்டுமே என்பதற்காக அந்த இயக்கத்தை கைவிட்டிருக்க மாட்டான். எனக்கு தெரிந்து அவன் மிகமிக புத்திசாலி. நிச்சயமாக பல இளைஞர்களைப் போல அந்த இயக்கத்தின் கேடுகளை வெகு சீக்கிரமே புரிந்திருப்பான். ஏனெனில் பின்னாளில் அவனே எனக்கு முன் கடவுள் மறுப்பாளன் ஆனான். சாதி மறுப்பு திருமணமும் செய்துகொண்டான். நல்லவேளையாக இந்த புத்தகத்தை அவனுக்கு பரிசாக அளிக்கவேண்டிய நிர்பந்தத்தை காலம் எனக்கு தரவில்லை.

(தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியாகவிருக்கும் "இந்துத்வாவின் நிழல் ராணுவங்கள் புத்தகத்தை படித்ததில் எழுந்த நினைவு குறிப்புகள்)

Saturday, March 24, 2018

உணவும் உணர்வும்



எண்சாண் உடம்பிற்கு அரைசாண் வயிரே பிராதானம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் நாம் யாரும் வயிற்றுக்கு போதும் என்று மட்டும் சாப்பிடுவதில்லை. பசி ருசியறியாது என்று சொல்லிக்கொண்டே உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று இன்னொரு சொல்லாடல் வைத்திருக்கிறோம். அதாவது ருசியில்லா பண்டம் நம் வயிறு ஏற்றாலும் நம் நாக்கு ஏற்பதில்லை. நரம்பில்லா நாக்கு என்ன வேண்டுமானாலும் பேசிவிடும் ருசியில்லா உணவென்றால். போனவாரம் என் நண்பர் தேனீ விசாகன் அவரை உணவகம் ஒன்றிற்கு அழைத்து சென்று சொன்னேன் இங்கே உள்ள பெரும்பாலான உணவுகள் வெளியே கிடைக்காது. சைவ உணவுகளில் அபூர்வமான சில உணவுகள் இங்கே உண்டு என்றேன். அதற்கு அவர் “ப்ராமணன் திங்க பிறந்தவன்” என்றார். அம்மாவிடம் சொன்னேன், அதற்கு அம்மா “ஆமாண்டா தின்னு கெட்டான் பிராமணன்னும் சொல்றதுண்டு” என்றார். எனக்கு தோன்றிற்று எல்லா மனிதனும் திங்க பொறந்தவந்தான். தின்னு கெட்டவன் தான். எல்லாருமே சாப்பாட்டு ராமன் தான், சாப்பாட்டு பிராமணன் தான்.




ருசியா சாப்பிடறது என நினைத்தவுடன் எனக்கு ஞாபகம் வருவது ராமராஜன் தான். அதற்கு பிறகுதான் கல்யாண சமையல் சாதம் பாட்டு, ராஜ்கிரண் எலும்பு கடித்தல் எல்லாம். கிட்டத்தட்ட நாம் பொறாமை கொள்ளும் அளவு ருசித்திருப்பார் ராமராஜன் அந்த படத்தில்(அத்தை சுட்ட அப்பளம்!!!). இப்படி ருசியை மட்டுமே நோக்காகி கொண்டு தேடி சாப்பிடும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு கடையாய் தேடி அங்குள்ள உணவை ருசி பார்த்து அடடா என சொல்லிச்சொல்லி சாப்பிடும் மனிதர்கள் உண்டு. இதை எழுதிக்கொண்டிருக்கும் நானும் உணவை தேடி உண்பவனாகிப் போனேன். எல்லா மனிதர்களும் வேலை முடித்து வரும்போது அல்வா, சேவு வடை என எதையாவது வாங்கிகொண்டு செல்லும் வழக்கம் இருந்தது. நாலுபேர் சாப்பிட்டு அதை எட்டுபேருக்கு சொல்லி அது நூறாகி ஊராகி பின் நாடு முழுவதும் கூட பிரசித்தி பெற்றுவிடுகிறது. மேலை நாடுகளில் Food Critics உண்டு. அவர்கள் எழுதும் விமர்சனங்கள் சிலசமயம் ஒரு உணவகத்தையே இழுத்து மூடுமளவு சென்றுவிடும். சில நொடிந்த உணவகங்களை மேலே மேலே உயர்த்திவிடும். இதோடு நில்லாமல் health department முறைவைத்து ஆய்வு செய்யும் உணவகத்தின் சுத்தம் உணவின் தரம் அனைத்தையும் ஆராயும். இங்கும் அவையெல்லாம் உண்டு என்றபோதும் அதை பெரியளவில் யாரும் கண்டுகொள்ளமல் இருக்கிறார்கள்.

ஆனாலும் நமக்கும் இப்போது சில பழக்கங்கள் கைவந்திருக்கின்றன. உணவை விமர்சனம் செய்தல் அதை பற்றி பேசுதல் என. சமூகவளைதளம் அதற்கு ஒரு மிகப்பெரிய இடத்தை கொடுத்திருக்கிறது. நமக்கு ஒரு உணவு பற்றி அதன் தரம் தெரிய வேண்டுமா? அதை சொல்லும் முகநூல் விமர்சகர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு சிறு ஆறுதல் இங்கே. அவர்கள் எண்ண ஓட்டங்களை நாம் நேரில் பார்க்க முடியும்போது பெரும்பாலும் கண்டுபிடித்துவிடாலாம். அது பொய்யா மெய்யா என்று. சினிமா விமர்சனம் போலன்றி இதில் முகமே காட்டிகொடுத்துவிடும் உணவு ருசியை. எழுதுகிறார்கள் எனில் ரொம்ப நேரம் விஷயத்தை சொல்லாமல் சிலாகிக்க முடியாது. சுருக்கமாக அவர்கள் எழுதும்போதும் பேசும்போதும் நமக்கு நாவில் எச்சில் ஊறவேண்டும். இந்த இடத்தில் டேவிட் சாரை அறிமுகம் செய்வது சாலப் பொருத்தமாக இருக்கும். அவர் உலகில் உள்ள ஏறக்குறைய பல நாடுகளுக்கு சென்று உணவுகளை ருசி பார்த்திருக்கிறார். உள்ளூர் நத்தை குழம்பில் ஆரம்பித்து நெருப்புக்கோழி, பாம்பு, முதலை கறி என எல்லாவற்றையும் ருசி பார்த்தவர். அவர் சொல்வதை கேட்கும்போது என்னமோ நாமும் அவருடன் ஆந்த இடத்தில் அமர்ந்து ருசிக்க தவறிவிட்டோமே என்றிருக்கும். அது நிச்சயமாய் போலித்தனமாய் இருக்காது. சொல்லும்போதே நமக்கு பசிக்க ஆரம்பித்துவிடும்.

எங்கோ காடுகளில் பச்சை மாமிசமும் இலை தழைகளும் உண்டோம். பிறகு அதையே ஆடையாக்கினோம். உண்பதிலிருந்து உடுப்பது வரை நெருப்பு கொண்டு வாட்டி பக்குவப் படுத்தினோம். நிலத்தை கீறி விதை விதைத்து விவசாய விஞ்ஞானம் செய்தோம். இறைச்சியை பதப்படுத்தி உப்பிட்டு தீயில்ட்டு பின் விளைந்ததையும் இறந்ததையும் ஒன்றாய் கலந்து சாப்பிட ஆரம்பித்து பின் அதில் சர்க்கரை, சத்து, புரதம் என ஆராய்ந்து ஏறக்குறைய உணவை ஒரு மாபெரும் தொழிற்கூடப் பயிற்சியாக்கி இருக்கிறோம். யாருக்கும் ரொட்டி இல்லை என்றால் என்ன கேக் சாப்பிடுங்கள் என சொன்ன சர்வாதிகாரத்திலிருந்து எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை யாருக்கும் கேக் கிடையாது என சொன்ன பொதுவுடைமை வரை உணவின் பின்னே ஒரு மாபெரும் அரசியலை உருவாக்கியிருக்கிறோம். அன்னமிடுவதையும் உண்பதையுமே ஒரு கௌரவம் சம்பந்தப் பட்டதாக கூட மாற்றியிருக்கிறோம்.

இறுதியாக இன்று நாம் விதம் விதமாக சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதை விமர்சனமும் செய்கிறோம். நம் உணர்வில் கலந்துவிட்ட ஒவ்வொரு உணவும் அதன் ருசியும் நம் ரத்தத்தில் கலந்து நாம் இறக்கும்வரை ஞாபகம் வைக்கப்படிருக்கிறது ஏறக்குறைய ஒரே ஒரு உணவை தவிர. அது தாய்ப்பால். இதை படிக்கும் யாருக்கேனும் முரண்பாடிருக்கலாம் ஆனால் எனக்கு ஞாபகமில்லை சத்தியமாக.


(நண்பரும் அண்ணனுமான இயக்குனர் சரவண கார்மேகம் அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலில் விளைந்த குறிப்புகள்)

Friday, March 23, 2018

நினைவுகளில் “பகத்சிங்”



சின்னவயதில் வரலாறு படிக்கும்போது எனக்கு பகத்சிங் மீது எந்த ஈர்ப்பும் இல்லைவரலாறு பாடத்தில் இரண்டு சம்பவங்களை குறிப்பிடுவார்கள் பகத்சிங் பற்றி சொல்லும்போதுநாடாளுமன்றத்தில் குண்டு வீசியதுஇரண்டு தூக்கிலிடப்பட்டதுவேறொன்றும் பெரிதாக எங்கள் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லவில்லைஅதற்கு இரண்டு காரணங்கள்எங்கள் வரலாற்று ஆசிரியரில் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் ரசிகர்இன்னொரு ஆசிரியை அந்த அளவுக்கு வரலாறு பாடம் மேல் ஈர்ப்பு கொண்டவர் இல்லைஎடுப்பதற்கு எளிதான பாடம் என்பதால் அந்த பாடம் எடுக்க ஒப்புகொண்டிருப்பார் என ஊகிக்கிறேன்பகத்சிங் பற்றி அதிகமாக நான் தெரிந்துகொண்டது இரகு மாமாவிடமிருந்து தான்அவர் அடிக்கடி சொல்வது “புரட்சி என்ற சொல்லை உபயோகப்படுத்தும்போதே இரண்டு பெயர்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிடுகின்றனஒருவர் சே இன்னொருவர் பகத்சிங்.”



பகத்சிங் பற்றிய நினைவுகள் எனக்கு குறைவாகவே இருக்கிறதுஅதற்கு காரணம் எனக்கு ஞாபகசக்தி கொஞ்சம் குறைவுஇரண்டாவது காந்தியை பற்றி வரலாறு பேசும் அளவுக்கு பகத்சிங் பற்றி சொல்லவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை நான் முன்வைக்கிறேன்வரலாற்றுப்பாடத்தில் காந்தியை பற்றி பல இடங்களில் குறிப்பிடுவதை பார்க்க முடியும்அவரை முதல்  உலகப்போர்தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் போராட்டம்இரண்டாம் உலகப்போர் என்று எல்லா போர்களுடனும் சுதந்திர போராட்டத்தை பற்றி படிக்கும் எல்லா இடங்களிலும் காந்தி இருப்பார்மேலும் ஆங்கிலம் தமிழ் பாடபுத்தகத்திலும் எதாவது ஒரு இடத்தில் அவரை ஒரு உதாரணமாகவாவது காட்டிவிடுவார்கள்அதில் இருபது சதவிகிதம் கூட பகத்சிங் பற்றி பேசியிருக்க மாட்டார்கள்இன்றைய பாடத்திட்டங்கள் எப்படி இருக்கிறதோ என்ற அச்சம் எனக்கு இன்னமும் அதிகமாகத்தான் இருக்கிறது.

தமிழில் பகத்சிங் பற்றி திரைப்படங்கள் எதுவும் வரவில்லை என நினைக்கிறேன்ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு காட்சியில் பகத்சிங்காக கர்ஜித்ததை தவிரஹிந்தியிலும் ஒரே ஒரு திரைப்படம்தான் பார்த்திருக்கிறேன் அது ரங்க் தே  பசந்திசித்தார்த் எனும் நடிகனை பார்த்து நான் வியந்த திரைப்படம் அதுதான்ஒருவேளை சித்தார்த் அதில் பகத்சிங்காக நடித்தது மட்டுமே காரணாமாக இருக்கலாம்ஆதவன்தீட்சன்யாவின் சொல்லவேமுடியாத கதைகளின் கதை என்ற சிறுகதை தொகுப்பில் ரஞ்சித் என்றொரு சிறுகதை இருக்கிறதுஒருவேளை பகத்சிங் பழகுவதற்கு அந்த கதையில் சொல்லப்பட்டதுபோல இருப்பார் எனில் அந்த கதையின்  ஒவ்வொரு வரியிலும் அழுந்த முத்தமிட்டு பகத்சிங்கை ஆரத்தழுவ எழும் ஆவலை நான் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த முறையாவது பகத்சிங் படம் ஒன்றை வாங்கி வீட்டில் மாட்டிவிட வேண்டும்சிவவர்மா எழுதிய விடுதலை பாதையில் பகத் சிங் புத்தகம் வாங்கி விடவேண்டும்புத்தக அடுக்கில் பகத்சிங் பற்றி இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றனஒன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் பதினோரு வருடங்களுக்கு முன் வாங்கியதுசிறிய புத்தகங்கள் அதில் ஒன்று பகத்சிங் பற்றியதுஇன்னொன்று அவர் எழுதிய “நான் நாத்திகன் ஏன்?” எப்போதாவது என்னுள் இந்த ஆன்மீகவாதிகள் ஏற்படுத்தும் குழப்பங்களில் இருந்து மீள நான் படித்துக் கொள்ளும் ஒரு புத்தகம்எனக்கு பகத்சிங் மீது ஒரு பெரிய ஈர்ப்பை உண்டாக்க ஒரு முக்கியமான காரணம் அந்த புத்தகம்காந்தி எழுதிய “The cult of the bomb” அதற்கு பகத்சிங் மற்றும் தோழர்கள் பதில் எழுதிய “The philosophy of the bomb” இரண்டையும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு பலநாட்களாக இருக்கிறது.

வேறு எப்போதையும் விட இப்போது பொருள்முதல்வாதிகளும் பொதுவுடைமை கொள்கையின் மீது பிடிப்புள்ளவர்களும் பகத்சிங்கை மக்களுக்கு நினைவுறுத்தவேண்டிய அவசியம் இருக்கிறதுஅதற்கு அவர் போராட்ட வரலாறு அவர் பொதுவுடைமை கொள்கை மீது வைத்திருந்த அபாரமான நம்பிக்கை என நமக்கு ஆயிரம் காரணங்கள் இருப்பதாலும் அதைவிட ஆபத்தான ஒரு காரணம் சேர்ந்திருப்பதாக அஞ்சுகிறேன்அது இந்துத்துவ அரசியல் பகத்சிங்கை உரிமை கொண்டாட முயற்சிக்கிறதுஎன் பயம் அர்த்தமற்றதாக கூட இருக்கலாம்ஆனால் என் பயத்திற்கான காரணம் பகத்சிங்கிற்கு அவர்கள் கொடுக்கும் உருவம்ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன் பகத்சிங்கிற்கு டர்பன் கட்டி நெற்றித் திலகமிட்டிருந்தார்கள்இன்னொன்று உங்கள் எல்லோருக்கும் தெரிவது தான்.  ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் அது பகத்சிங் தூக்கிலிடப்பட்ட  நாளாக பொய் பிரச்சாரம் செய்வதுஇது வெறும் ஆரம்பம் தான்உங்களுக்கு என் அச்சத்தை பற்றி ஐயம் இருந்தால் இ.பாசிந்தனின் மொழிபெயர்ப்பில் ஒரு புத்தகம் வெளிவரும் அதை படித்து தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதை தாண்டியும் இந்துத்வவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்சிலை உடைப்பு அரசியலை அவர்கள் முன்னெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள்திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்புசாவித்ரி பாய் பூலே சிலை சேதம் என  அதன்மூலம் சித்தாந்தங்களின் பங்களிப்பை தனிமனிதர்கள் மனதில் இருந்து  அழித்துவிடக் கனவுகளும் காண்கிறார்கள்நாம் பெரியார் அம்பேத்கர் சிலைகளை பாதுகாப்பதோடு பகத்சிங் சிலைகளை நிறுவவேண்டும்ஒருவேளை பகத்சிங்கின் கொள்கைகளை நம் மக்கள் சுவீகரித்துக் கொள்ள அது முக்கிய காரணியாக பங்காற்றலாம்சே வின் புகழை அமெரிக்க அரசாங்கம் எவ்வளவு முயற்சித்தும் குன்றச் செய்ய முடியாததை போல நாம் பகத்சிங் புகழை இந்துத்வம் திருடிக்கொள்ளமுடியதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்இரகுமாமாவின் வார்த்தைகளில் சொல்வதானால் “இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பகத்சிங்கும் சேவும் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்” என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

இன்குலாப் சிந்தாபாத்.
(ஷாஹீத் ரஞ்சித் பகத்சிங்கின் நினைவு தினத்தை ஒட்டி எழுதப்பட்ட நினைவு குறிப்பு  )

புத்தக திருவிழா கொண்டாட்டம்


நானெல்லாம் புத்தகம் படிக்க உட்கார்ந்தாலே தூக்கம் வரும் என்று என்னிடம் கிண்டலாய் சொல்பவர்கள் உண்டு. அவர்கள் எவ்வளவு என் மனதை கவர்ந்த பெண்களாக இருந்தாலும் சரி இல்லை எவ்வளவு நான் மதித்து போற்றும் நபர்களாக இருந்தாலும் சரி என் பதில் இதுவாகத்தான் இருக்கும் “இப்படி சொல்றதுக்கு நீங்க வருத்தப்பட வேண்டாமா?” என் முக்கால்வாசி நண்பர்கள் புத்தகம் படிப்பது என்னவோ பெரும் சாதனை என்று நினைக்கிறார்கள் இல்லை தரக்குறைவாக அதை ஒரு நேர விரயமாக கருதுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை புத்தகம் என்பது காதலியுடன் நேரத்தை செலவிடுதல் போன்றது. நான் ஆண்பால் என்பதால் காதலி. என் ஆகச்சிறந்த அனுபவங்கள் புத்தகம் எனக்கு தந்தவை. நான் ஒரு புத்தகம் படித்து முடித்த பிறகு நான் எதிர்கொள்ளும் நபரை பார்க்கும்போது என்னுள் பெருமிதம் எகிறிக் குதிக்கும். ஒரு புத்தகத்தின் சாரத்தை அந்த உணர்வை இன்னொருத்தருக்கு தொற்ற வைக்க மனம் முயற்சித்துக் கொண்டே இருக்கும். பகிர்ந்தளிக்கும் குணம் எனக்கு தெரிந்து அன்னத்திலும் வாசிப்பிலும் தான் முடிகிறது. ஒரு வாசகனாக வாழ்தல் அழகு.

அம்மா என்னை நூலகம் அழைத்துப் போய் பழகிய பழக்கம் தான் இன்று புத்தகங்களை தேடி வாங்கி அடுக்கி அதனுடன் காதலாய் பேசும் பைத்தியத்தை எனக்கு பிடிக்க வைத்தது. நான் என் சக நண்பர்கள் பெற்றோர்கள் ஆகும்போது அவர்களுக்கு சொல்வது குழந்தைகளை படிக்கத் தூண்டிக்கொண்டே இருங்கள் என்பதை தான். முதலில் எதைஎதையோ படிக்க ஆரம்பித்து பின் இன்னதெல்லாம் படிக்க வேண்டும் என்று புரிந்து இது தான் என் சமூகம் இதற்கான அரசியல் இதுதான் என தெளிந்து அதற்கான புத்தகங்களோடு மாற்றத்திற்கு தயாராக நிற்பது ஒரு மாபெரும் தவம்.
எனக்கு தவராஜ் என்றொரு நண்பர் இருக்கிறார். அவர் வாசகன் இல்லை தான். ஆனால் என்னை பார்க்க வரும் ஒவ்வொரு சமயமும் தன் மகனுக்கு நல்ல புத்தகங்களை பரிந்துரைக்கும்படியும் குழந்தைகள் சினிமாக்கள் அறிமுகப்படுத்த சொல்லியும் கேட்டுகொண்டே இருப்பார். தன் மகனை சான்றோனாக்குதல் என்பதும் அவையத்து முந்தியிருப்பச் செயல் என்பதும் அவனுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்தலே என்பதை புரிந்து வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட தந்தையர்களாலும் தாயார்களாலும் குழந்தைகளாலும் இந்த புத்தக சந்தை நிரம்பி வழியட்டும். பொங்கல் மற்றும் புத்தக திருவிழா நல்வாழ்த்துகள் என் எல்லா முகநூல் நண்பர்களுக்கும், இந்த பதிவை படிப்பவர்களுக்கும் மற்றும் முகநூலை வந்து பார்ப்பவர்களுக்கும்.

(சென்னை புத்தக சந்தைக்காக எழுதிய குறிப்பு)

CONFESSION OF A MALE CHAVUNIST


எப்போதும் சீருடையில் இருக்கும் வரேவேற்பாளினி இன்று வண்ண சுடிதாரில் இருந்தாள். என்ன இன்றைக்கு உன் பிறந்த நாளா? என்று கேட்டேன். Women's day என்றாள். ஒரு புன்னகையுடன் happy working women's day என்றேன். Thank you என்ற அவளுடைய பதிலுக்கு உலகத்தையே பரிசாகத் தரலாம்.
அவளை சந்தித்துவிட்டு படி ஏறுகையில் தான் யோசித்தேன் எல்லா பெண்களும் working women தானே. பிறகென்ன happy working women's day? வெறுமே happy women's day என்றே சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லவதானால் அம்மாவுக்கு சொல்லி இருக்க வேண்டும். தோன்றவில்லை. கூடப்பிறந்த சகோதரிக்கு சொல்லி இருக்க வேண்டும். கூச்சமாக இருக்கிறது. உறவுகளில் இருக்கும் பெண்களுக்கு சொல்லி இருக்க வேண்டும். தயக்கமாக இருக்கிறது. தோழிகளுக்கு சொல்லி இருக்கலாம். மேலே குறிப்பிட்ட யாருக்கும் சொல்லாமல் அவர்களுக்கு சொல்ல மனம் வரவில்லை. சரி முகநூல் என்று ஒன்று இருக்கிறதே. அதில் சொல்லலாம் என்றால் நம் பதிவை எல்லாம் மதிக்கிற அளவுக்கு நம்ம பதிவு இல்லை. நாம் நண்பனான போதா காரணத்துக்கு நம் நட்பில் நாலு பேர் லைக் போடுவார்கள்.

சரி ஒருவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்றால் அவர் மகிழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டும். பங்கெடுக்க வேண்டும் என்றால் அணுக்கமாக இருக்க வேண்டும். அணுக்கமாக என்றால் அவர்கள் உலகம் என்ன என புரிந்திருக்க வேண்டும். எனக்கோ அம்மா வைக்கும் சாம்பாருக்கு துவரை போடுகிறாரா அவரை போடுகிறாரா என்று கூடத் தெரியாது. ஒரேஒரு முறை அம்மா சொல்ல சத்துணவு டீச்சராக வேலை பார்த்த அனுபவத்தை கேட்டிருக்கிறேன். அப்பா அம்மாவை வேலைக்கு அனுப்பாமல் இருக்க செய்த சூழ்ச்சி பற்றி அம்மா வருத்தத்துடன் பகிர்ந்த நாள் அது. மற்றபடி எனக்கு தெரிந்ததெல்லாம் women are from venus. இப்படி சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும் உண்மையை மெல்லத்தான் வேண்டும்.
இரண்டு மூன்று புத்தகங்கள் படித்திருக்கிறேன். பெண்மை எனும் கற்பிதம், உலக வரலாற்றில் பெண்கள், குரலற்ற பொம்மைகள், பெண் எனும் பகடைக்காய். என்ன படித்தாலும் என்ன? அம்மா சொல்வது போலத்தான் கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த வார்த்தையும் எத்தனை நாளைக்கு? நாமாகத் திருந்த வேண்டும். .
எங்கோ யாரோ சொன்னதாக ஞாபகம் இந்தியாவில் உள்ள அத்தனை பெண்களும் இரண்டாந்தர குடிமக்களாகத் தான் நடத்தப் படுகிறார்கள் என்று. வைரமுத்துவை ஆதாரமிருக்கா என்று கேட்டதுபோல என்னை கேட்க வேண்டாம். என்னிடம் ஆதாரம் இல்லை. வெறும் ஞாபகம் தான். ஒரு வாரத்தில் ஏதாவது ஒரு பெண் வன்முறைக்கு ஆளாகிறாள் என்று தானாக ஒரு புள்ளிவிவரக் கணக்கு போட்டிருக்கிறது என் மனது. ஆதாரத்திற்கு செய்தி சேனல்களை பார்க்கவும்.
ஏதோ ஒரு வகையில் எனக்கு தெரிந்த ஆண் நண்பர்கள் பெண்களை வசைபாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். தடுத்து கண்டிக்கும் தைரியம் இல்லாமல் இன்னமும் கூட அவர்களுடன் சுற்றிக் கொண்டு இருக்கிறேன். பலசமயங்களில் ஆண் எனும் உணர்வு கொடுக்கும் சுதந்திரம் மிகவும் ஆபத்தானதாகவும் வெட்கக்கேடாகவும் இருக்கிறது. இதில் கெட்ட வார்த்தை கலாச்சாரம் வேறு. பல சமயம் பெண்களை கொச்சை படுத்தும் வார்த்தைகள். உபயோகிப்பதை நிறுத்தினாலும் மனதில் பதிந்ததை அழிக்க முடியுமா? அடுத்த தலைமுறைக்குள்ளாவது அவை வழக்கொழிந்து போகவேண்டும்.
இப்போது இதெல்லாம் போதாது என இன்னொரு பிரச்சினை. கீழே வாழ்த்திய அந்த பெயர் தெரியாத வரேவேற்பாளினியை இத்தனை சிந்தனைக்கு பிறகு இனி நேருக்கு நேர் முகம் பார்த்து வெட்கமின்றி பயமின்றி சிரிப்பது எப்படி?

(மார்ச் 8 2018 அன்று உலக மகளிர் தினத்திற்காக எழுதிய நினைவு குறிப்பு)