Monday, May 14, 2018

ஏனென்றால் என் பிறந்தநாள்

துன்பம் நிறைந்த வாழ்வில் மகிழ்ச்சி எண்ணிப்பார்க்கும் அளவே இருக்கும்

என்று தால்ஸ்தாய் சொல்லவில்லை. அவர் அப்படி சொன்னதாக நான் எடுத்துக் கொண்டேன். அப்படியான சந்தோஷமான தருணங்களில் ஒன்று என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாதிரி மகிழ்ச்சி இருக்கும். ஒருமுறை சந்தனக்கலரில் சட்டை போட்டுக்கொண்டு வீடுவீடாக எவர்சில்வர் டப்பாவில் சாக்லேட் கொடுத்துவிட்டு வந்தேன். ஒருமுறை மது என்னை அழைத்துப் போய் சமோசா வாங்கிக் கொடுத்தான். இரண்டு பிறந்தநாட்களுக்கு அப்பா வாட்ச் வாங்கி தந்தார். இரண்டு வாடச்சுகளுக்கும் நடுவே எட்டு வருடங்கள் வித்தியாசம் இருக்கிறது. அதற்கு பல வருடங்களுக்கு பிறகு நண்பர் பிரேம் வாட்ச் வாங்கி கொடுத்திருக்கிறார்.


பிறந்த நாளுக்கு கேக் வெட்டும் பழக்கம் கிடையாது. ஆனால் ஆசை இருக்கிறது. என் ஆறாவது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய ஞாபகம் இருக்கிறது. அன்று அக்காவின் தோழிகள் நிறையபேர் வந்திருந்தார்கள். அதில் இப்போது ஞாபகம் இருப்பது கவிதாக்காவும் அவர் கண்ணாடியும் மட்டும்தான். கண்ணாடி போட்ட பெண்களின் மீது என்னுள் பெருகும் அன்பிற்கும் காதலுக்கும் அது காரணமாக இருக்கலாம். பிறகு கேக் வெட்டியது என்னுடைய இருபத்தி இரண்டாவது பிறந்தநாளில். பிரகாஷ் சந்தோஷ் ராம் என என் அலுவலக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாடிய பிறந்த நாள் அது. நான் அதிகமாக பரிசுகள் பெற்ற பிறந்த நாளும் அதுதான். இரண்டு பேண்ட் இரண்டு சட்டை. காதலியிடமிருந்து ஒரு சட்டை(இப்போது முன்னாள்), ஒரு பிள்ளையார் பொம்மை, பணி நிரந்தர ஆணை அப்புறம் ஒரு மிக்கிமௌஸ் கேக். அதில் எழுதிய வாசகங்கள் இப்போதும் புன்னகை வரவழைப்பது. Happy birthday Mr. Romeo.
சத்தியமாக அதைத்தான் எழுதி இருந்தார்கள்.

அதேபோல பிறந்த நாளில் எதையாவது வித்தியாசமாக செய்து பார்க்கும் ஆசை வரும். சிலசமயம் அது சரியாக வரும். சிலநேரங்களில் சொதப்பும். ஒருமுறை பிறந்த நாள் அன்று வேலைக்கு கிளம்பிவிட்டேன். அம்மா எவ்வளவு காசு வேண்டும் என்று கேட்டார். யாருக்கும் செலவழிக்க தோன்றவில்லை. நூறு ரூபாய் கொடு போதும் என்றேன். ஒரு மாதிரி முறைத்தபடியே கொடுத்தார். அலுவலகம் வருவதற்குள் எண்ணம் மாறிவிட்டது. சரி எதையாவது வாங்கலாம் என முடிவுசெய்து என்ன வாங்குவது நூறு ரூபாய்க்கு என்று யோசித்தபடியே கடையில் இருந்த ஒரு பெட்டியை வாங்கினேன் நூற்றியிருபது ரூபாய்க்கு.  என் பையில் குப்பையுடன் குப்பையாய் பணத்தை திணித்து வைத்திருப்பேன். எப்போது துழாவினாலும் ஐம்பது தேறும். எனவே வாங்கிப்போய் பெட்டியில் இருந்ததை எல்லோருக்கும் கொடுத்தேன். எல்லோருக்கும் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட குழந்தை பருவத்திற்கே போய்விட்டார்கள். எனக்கு ஒருவாரம் முன்பு பிறந்த நாள் கொண்டாடிய சிவா என்னிடம் ரகசியமாக கேட்டார். எவ்வளவு செலவு பண்ணீங்க என்றார். சொன்னேன். எண்ணுறு ரூபாய்க்கு A2B ஸ்வீட் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். ஒரு பய என்னை ஞாபகத்துல வெச்சுக்கமாட்டான். நீங்க பெரிய ஆளுங்க என்றபடி alpenliebe lollipopஐ சப்பியபடி சொல்லிவிட்டு சென்றார். சிரித்துக் கொண்டேன்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எனக்கு எப்போதுமே வரமான நாட்கள் தான். ஒவ்வொரு வருடமும் நம்மை நினைவில் வைத்து வாழ்த்தும் உள்ளங்களே நம் ஆயுள் நீட்டிப்பிற்கும் நாம் வாழும் வாழ்வின் பக்கங்களை நிரப்புவதற்கும் காரணமானவர்கள். இதை தலைகீழாகவும் சொல்லலாம். தோழமை தாய்மார்களாக தோழமை தந்தையர்களாக தோழமை சகோதரசகோதரிகளாக உறவுகளில் நண்பர்களாக முகநூல் நட்புகளாக என வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் மட்டுமே என் இரண்டு பிறந்தநாட்களுக்கு நடுவில் என்னையும் என் அன்பையும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் ஆக்சிஜன்கள். ரஜினிகாந்தின் மனிதன் திரைப்படத்தில் ஶ்ரீவித்யா உதட்டசைக்கும் பாடல் ஒன்றில் வரும் இந்த வரிகளை அந்த அன்புள்ளங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். "உள்ளிருந்து வாழ்த்தும் உள்ளமது வாழ்க"

5 comments:

  1. ஒவ்வொரு வருடமும் நம்மை நினைவில் வைத்து வாழ்த்தும் உள்ளங்களே நம் ஆயுள் நீட்டிப்பிற்கும் நாம் வாழும் வாழ்வின் பக்கங்களை நிரப்புவதற்கும் காரணமானவர்கள். // ������

    ReplyDelete
  2. முன்னால் காதலியை பற்றி கொஞ்சம் எழுதலாமே பாலாஜி

    ReplyDelete
    Replies
    1. எழுதியிருக்கிறேன். ஆனால் சமீபத்திய முன்னாள் காதலி. எல்லா காதலிகளை பற்றியும் ஒரு பதிவு நிச்சயம் வரும் பிரபாகரன்!😀

      Delete