Saturday, February 23, 2019

Tolet - தமிழ் சினிமா

Tolet பார்த்து முடித்த பிறகு தோன்றிய டயலாக்கை கடைசி பாராவில் எழுதி முடிக்கிறேன். படம் நிச்சயமாக பிரமாதமான திரைப்படம். காட்சிக்கு காட்சி என்னை சுவாரஸ்யப் படுத்தியது. இன்னார் நடிப்பு வெகு அருமை என குறிப்பிட்டுச் சொல்லமுடியாமல் தினறிக் கொண்டிருக்கிறேன். நிறைய பேசவேண்டிய விஷயங்கள் திரைப்படம் முழுவதும் இருந்தது. முடிந்த அளவு சுருக்கமாக பதிக்கிறேன்.


மாநகரம் ஒரு கான்கிரீட் காடு என்று நிறைய சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை உணர்த்தும் இருக்கிறேன் ஆனால் அந்தக் காட்டில் இளைப்பாற இடம் கிடைப்பது என்பது ஒரு பெரிய சவால். பிரம்மப்ரயத்தனம் என் வார்த்தையில்.  முரளியின் "மாநகரம்" கவிதையில் "அந்த மாநகரம் இன்னும் வேகமாக இயங்குகிறது அன்பற்றதாக". என்று முடித்திருப்பார். அது எவ்வளவு அன்பற்றதாக இயங்குகிறது என்பதை மிகக் கண்கூடாக தெரிந்து கொள்ள நாம் வாடகைக்கு வீடு தேட ஆரம்பித்தால் தெரியும். எத்தனை கேள்விகள், எத்தனை அலட்சியப் பார்வைகள், எத்தனை சீண்டல்கள் அடச்சே என்ற ஒரு எண்ணம் வந்துவிடும் எவ்வளவு மனோதிடம் கொண்டவருக்கும். அந்த மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது Tolet.

பிடித்த நடிப்பு என ஒவ்வொருவருடைய நடிப்பிலும் ஒவ்வொன்றை சொல்கிறேன். இளங்கோ அமுதாவிடம் பணம் தரும் காட்சி, அமுதா அழைப்பு மணிச்சத்தத்தை கேட்டு ஓடிவரும் காட்சி. சித்து வரும் எல்லா காட்சிகளும். அதிலும் சித்து மட்டும் படத்தில் தனியாக தெரிந்தான் எனக்கு. "இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்கிற பிரபஞ்சனின் வரிகளை சித்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தான் எனக்கு.  இயக்குநரை பாராட்ட ஆயிரம் பேருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் நான் உட்பட. என்னை பொறுத்தவரை மாநகரங்களில் வசிக்கும் அத்தனை மனிதர்களும் இந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட மனிதர்களே. எல்லோரையும் பாதிக்கும் திரைப்படம் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. இந்த ஒரு பிரச்சினையைக் கொண்டு வர்க்கப்பிரிவினையை மிக எளிதாக புரியும்படி அருமையாக காட்டிவிட்டார் இயக்குநர் அதற்காகவே ஒரு ரெட் சல்யூட்.

 ஆனால் வலிந்து ஒரு திரைப்படத்தை சோகத்தை நோக்கி நகர்த்துவது என்பது திட்டமிட்ட படுகொலைக்கு சமம். என்னை பொறுத்தவரை யதார்த்த சினிமா என்கிற சொல்லாடல்கள் எல்லாம் ஜிகர்தண்டா நரேன் ஸ்டைலில் சொல்லவேண்டுமானால் "எழவை கூட்டி அவார்டு வாங்கும்" ஆசைக்கான மாயப்போர்வை. அந்த போர்வைக்குள் புகுந்து கொண்டு செய்யும் அக்கிரமங்கள் பல. யாரோ ஒரு கிராமத்து இசைக் கலைஞரின் காலில் விழுந்து வாத்தியக் கருவியை பிடுங்கிக் போய் 25000 ரூபாய்க்கு விற்று குழந்தைக்கு நாய்க்குட்டி வாங்கித்தருவது, அப்புறம் கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் கதை சொல்கிறேன் என்று எல்லோரையும் கொடுரமாக போட்டுத் தள்ளுவது, உண்மையை அழித்துவிட்டு உண்மைக் கதை எனப் போடுவது அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி எல்லாம் பெரிய தவறு இல்லை என்றாலும் ஒரு குறை இந்த படத்திலும் இருக்கிறது. இல்லை இது இப்படித்தான் க்ளைமாக்ஸாக இருந்தது என நீங்கள் சொல்லமுடியாது. ஏனெனில் எங்கோ ஓரிடத்தில் இது போன்ற tolet அலைச்சல்கள் இளைப்பாறி இருக்கும்.  அது போன்ற இளைப்பாறலை சொன்னதினாலேயே அங்காடித்தெருவும் பரியேறும் பெருமாளும் மனதில் மகாவீரச் சம்மணம் போட்டிருக்கிறது என்னுள். அந்த இளைப்பாறலை பதிவு செய்யத் தவறிவிட்டது இந்தப் படம்.

இப்போது முதல் பாராவில் நான் கமிட் செய்த அந்த மனதில் தோன்றிய வரிகளை சொல்கிறேன். The middle என்னும் ஆங்கிலத் தொடரில் வருவன அவை. "நம் யாருக்கும் சந்தோஷமான முடிவென்று ஒன்று கிடையாது. இடைப்பட்ட நாட்களில் முடிந்த அளவு எத்தனை துன்பங்களுக்கு இடையிலும் நம்மால் முடிந்த சந்தோஷங்களை கொடுப்போம்." (அதற்காக எல்லாப் படங்களிலும் மகிழ்ச்சியான முடிவு வேண்டும் என சொல்லவில்லை. ஆனால் இந்தப் படத்தில் சொல்ல வாய்ப்பிருக்கிறது. அது உண்மைக்கும் யதார்த்தத்திற்கும் அருகில் இருக்கிறது ஆனால் அது விடுபட்டு விட்டது என்கிறேன்).

#தமிழ்சினிமா

No comments:

Post a Comment